×

பனை மரத்தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்க ரூ.50,000 உதவித்தொகை: வாரிய தலைவர் நாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உதவி தொகையாக ரூ.50,000 வழங்குவதற்கு, வாரிய தலைவர் நாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6வது கூட்டம், தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கருத்தரங்க கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தொழிலாளர் நல வாரிய கூடுதல் ஆணையர் வேலாம்பிகை, நிதித்துறை சார்பு செயலர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் பொது மேலாளர் ஆர்.ஜீவா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குநர் தண்ணன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் பா.மாதவன் மற்றும் வேலையளிப்போர், தொழிலாளர் தரப்பு வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாரியக் கூட்டத்தில், பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.25,000, மற்றும் ரூ.50,000 வழங்குவதற்கும், மேலும் கண் கண்ணாடி உதவித் தொகை ரூ.500லிருந்து ரூ.750 ஆக உயர்த்துவதற்கும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும், பதநீர் இறக்கும் உரிமம் நிதியாண்டின் படி அல்லாமல் காலண்டர் ஆண்டின் அடிப்படையில் வழங்க வேண்டும்,

பனைமரத் தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும், நல வாரியத்தில் வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வாரிய உறுப்பினர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டன. முன்னதாக, கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில தேசிய நலத்திட்டம் ஆகியவை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து மேற்கொள்ளும் ‘ஒரு கோடி பனை விதை நடும் நெடும் பணி’ திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

The post பனை மரத்தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்க ரூ.50,000 உதவித்தொகை: வாரிய தலைவர் நாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Palm Wood Workers Welfare Board ,Narayanan ,Chennai ,Tamil Nadu Palm Tree Workers Welfare Board ,
× RELATED அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி...